tamilnadu

img

மனித நேயம்தான் அங்கே விஞ்சி நின்றது...

பஹ்ரைனில் மே மாதம் 26 ம் தேதி நான் கண்டு மெய்சிலிர்த்து நின்ற ஒரு நிகழ்வை இங்கு பகிர்கிறேன்.

கோவிட் 19 நோய் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்த இரண்டு இந்தியரின் (இந்துக்கள்) வீட்டாரும்கேட்டு கொண்டதற்கிணங்க பஹ்ரைன் அரசு இருவரின் பூத உடலை எரியூட்ட ஒப்புதல் தெரிவித்து, இந்துமயானத்திற்கு உடல்களை அனுப்பிவைத்தது. (அரபு நாட்டில் இந்து மயானமா என்று கேட்பவர்களுக்கு, பஹ்ரைன் அரசு இங்கு பிழைப்புக்கு வந்து வாழும் இந்து மக்களுக்கு அவர்கள் உடலை எரித்து கொள்வதற்காக மயானம் ஒன்றை இலவசமாக ஏற்பாடு செய்துகொடுத்துள்ளது. அதனை வட இந்திய பாட்டியா சமுதாய சங்கம் ஒன்று நிர்வகிக்கிறது.  விறகால் எரிக்கப்படுகிறது. ஒரு உடலை எரிக்க சுமார் 50,000 ரூபாய்பாட்டியா சமூகம் நடத்தும் சங்கத்திற்கு கட்டவேண்டும்)உடல் வந்து சேரும் முன்பே சுடுகாட்டை அடைந்தநான் உட்பட நான்கு பேரும் அங்கிருந்த காவலாளியும், கோவிட் பாதித்த உடலை எப்படி எரியூட்டுவது, யார் உடலை எடுத்து வைப்பது என்ற குழப்பத்திலும் பயத்திலும் நின்றிருந்தோம். கோவிட் 19 நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரிழந்த உடலை எரிப்பது அன்றுதான்  முதன் முறையாக  நடக்க இருந்தது.  

சற்று நேரத்தில் காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு எனப்படும் தீயணைப்புத் துறை வண்டிகள் வரிசை கட்ட, ஒரு  ஆம்புலன்சில் முறையாக பிளாஸ்டிக்உறையில் சீலிடப்பட்ட இரண்டு உடல்கள் வந்தன.  தீயணைப்புத் துறை வீரர்கள்  எங்களை யார் எவர் என்றுகேட்ட பின் சுடுகாட்டில் இருந்து வெளியேற்றி சற்று தொலைவில் நிற்க வைத்து, சுடுகாட்டின் பெரிய கதவுகளை திறந்து வைத்து நடப்பதை நாங்கள் பார்க்கும்படி ஏற்பாடு செய்தனர்.  ஏழு வீரர்கள் முழு பாதுகாப்பு உடையுடனும், முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர் சுமந்து உள்ளே சென்றுகாவலாளியை அழைத்து சற்று நேரம் விவாதித்து விட்டு அவருக்கும் பாதுகாப்பு உடைகளை அணிவித்துசற்று தள்ளி நிற்க வைத்து விட்டு, ஏழு வீரர்கள் மட்டும் உடல்களை ஆம்புலன்சில் இருந்து இறக்கி ஏற்கனவேதயாராக இருந்த சிதையின் மேல் பூவை வைப்பது போல் மெல்ல வைத்துவிட்டு, உடலின் மீது விறகுகளைமிக மெதுவாக அடுக்கினார்கள். பின் காவலாளி (இந்து)கையில் சுமார் 10 அடி நீளம் இருந்த கம்பியில் தீப்பந்தம்கொடுத்து தீ வைக்க சொன்னார்கள். 

நடந்தவைகளை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த எங்களை இன்னும் உணர்ச்சிவயப்பட்டு மெய்சிலிர்க்க வைத்தது, எரியூட்டப்பட்ட உடல்களை முழுவதுமாக தீ சூழும் வரை அந்த ஏழு வீரர்களும் சிதையில்இருந்து சற்று தூரத்தில் அணிவகுப்பு மரியாதை போல சுமார் 10 நிமிடம் வரை அமைதியாக நின்ற காட்சிதான்.இப்பணியில்  ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் அனைவரும் அரேபிய  முஸ்லிம்கள். உடலை எரிப்பது என்பது அவர்களுக்கு புதிது. இந்துக்களின் எரியூட்டும் மத சடங்கை பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.மனிதநேயம் தான் அங்கே விஞ்சி நின்றது. கொரோனா பாதித்த உடல் என்பதற்காக பயப்படாமலும், மாற்றுமத சடங்கை நாம் செய்கிறோமே என்று சங்கடப்படாமலும் முழு மரியாதையுடனும் அவர்கள் தகனம் செய்தவிதம் எனச் சொந்த நாட்டில் மதங்களின் பெயராலும், கோவிட் 19 பெயராலும் நடக்கும் அவலங்களை எனக்குநினைவுபடுத்தி தலைகுனிய செய்தது. 

===எம்.ஜி.கே.முகம்மது ஹூசைன் மாலிம்=== 
நிறுவனர், பாரதி தமிழ் சங்கம், பஹ்ரைன்